நாகப்பட்டினம், ஜூலை 16: நகை பறிப்பில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்யக்கோரி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பச்சையன்காடு செட்டி புலம் பகுதியை சேர்ந்த செல்லம் என்ற பெண்ணை தாக்கி பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போலீசார்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


