மயிலாடுதுறை, நவ.13: மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரையை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் பழவாறு செல்கிறது. இந்த ஆறு, வரக்கடை, பாக்கம், காவளமேடு, கொற்கை, தாழஞ்சேரி, நாராயணமங்கலம், வில்லியநல்லூர், மேலாநல்லூர், நடராஜபுரம், பட்டவர்த்தி வழியாக சீர்காழி வரை சென்று கடலில் கலக்கிறது.
இந்த ஆற்றின் மூலம் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். மேலும் இந்த ஆறு மழைநீர் வடிகாலாகவும், நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உச்சிதமங்கலம் என்ற கிராமத்தில் பழவாற்றில் ஆகாயத்தாமரைகள் புதர்போல மண்டி காணப்படுகிறது.
ஆற்றில் தண்ணீர் இருப்பது கூட தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் வளர்ந்து கிடப்பதால் பாசனத்திற்கு, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால், பழவாற்றில் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே உச்சிதமங்கலம் பகுதியில் செல்லும் பழவாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
