கொள்ளிடம், மே 6: மேதினவிழா மற்றும் வணிகர்களின் மாநாட்டை முன்னிட்டு கொள்ளிடம் பகுதியில் நேற்று ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம், புத்தூர், மாதானம், புதுப்பட்டினம், ஆச்சாள்புரம், அரசூர், கடவாசல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் உள்ளன. மளிகை, சிறு உணவு விடுதிகள், பெட்டிக்கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்ட கடைகள் இருந்து வருகின்றன.
வணிகர் தின விழாவை முன்னிட்டு நேற்று திருவாரூரில் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே தின விழா மற்றும் வணிகர்களின் மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொள்ளிடம் பகுதியில் அனைத்து வியாபார கடைகளும் நேற்று காலை முதல் மாலை வரை அடைக்கப்பட்டிருந்தன. மேலும் கொள்ளிடம் பகுதியிலிருந்து 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் சென்று மாநாட்டில் கலந்து கொண்டனர்.



