நாகப்பட்டினம், மே 4: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ நீட் தேர்வினை 1429 பேர் எழுதினர். நீட் தேர்வில் 68 பேர் பங்கேற்கவில்லை. தேசிய தேர்வு முகமை சார்பில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று (3ம் தேதி) மதியம் 2மணி முதல் மாலை 5.20 மணி வரை நடந்தது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 1497 பேர் விண்ணப்பம் செய்தனர். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம் ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியின் நீட்தேர்வு மையத்தில் 177 பேரும், நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியின் நீட்தேர்வு மையத்தில் 240 பேரும், நாகப்பட்டினம் ஏடிஎம் மகளிர் கல்லூரி நீட் தேர்வு மையத்தில் 480 பேரும், நாகப்பட்டினம் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளி நீட்தேர்வு மையத்தில் 360 பேரும், நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 240 பேரும் என விண்ணப்பித்திருந்த மொத்தம் 1497 பேருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் நேற்று நடந்த தேர்வில் 1429 பேர் கலந்துகொண்டு நீட் தேர்வு எழுதினர். 68 பேர் நீட்தேர்வு எழுதவில்லை.



