Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இன்று மாங்கனி திருவிழா கோலாகலம் காரைக்கால் அம்மையாரை ‘அம்மே’ என்றழைத்த சிவபெருமான்

காரைக்கால் அம்மையார் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற அடியாருள் ஒருவர். காரைக்கால் அம்மையாரின் காலம் பொ.யு. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார். புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட அம்மையார், காரைக்கால் என்னும் ஊரில் சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்குப் மகளாக பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோயிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

மாங்கனியில் திருவிளையாடல்: ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். அவரை வரவேற்று அமரச் செய்தார் அம்மையார். மதிய உணவு தயாராக இல்லாததால் தயிர் கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்குப் பல வகைப் பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக் கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதி அவரை விட்டு நீங்கி வாணிபம் செய்வதற்காக கடல் பயணமாகச் சென்றார்.

பேய் வடிவு பெறுதல்: பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. இத்தகவல் அறிந்த அம்மையார், பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு சென்றார்.

தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கினார். அதன்பிறகு ”கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவனை வேண்டி சிவபூதகண வடிவம் பெற்றார்.

கயிலாயம் செல்வது: அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க ”நம்மைப் பேணும் அம்மை காண்” எனக் கூறி ”அம்மையே வருக” என்றழைத்து ”வேண்டுவன கேள்” என விளித்தார், அதற்கு அம்மையார் ”பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும் என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர். இந்த வரலாற்றை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.