உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு: பொதுமக்களுக்கு தாமதமின்றி அரசு சேவைகளை வழங்கிட வேண்டும்
மயிலாடுதுறை, ஜூலை 17: மயிலாடுதுறை வட்டத்தில் \”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்\” திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் காந்த் கள ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம், ஆனைமேலகரம் பகுதியில் கிராம அலுவலகம், மூவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி, மூவலூர் கூட்டுறவு அங்காடி மற்றும் சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு, மயிலாடுதுறை வட்டம், பட்டமங்கலம் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம், வில்லியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவைகளை \”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்\” திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் காந்த் கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பொதுமக்கள் மனுக்களின் நிலை, பட்டா. சிட்டா மற்றும் நிலப் பதிவுகள் பராமரிப்பு, பிறப்பு, இறப்பு உள்ளிட்ட பதிவேடுகள், அலுவலக வருகைப் பதிவு சேவை வழங்கல் மற்றும் அரசுத் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார். தேவையான இடங்களில் பதிவேடுகளை சரியாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு தாமதமின்றி சேவை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள், உறுப்பினர் சேவைகள், சேமிப்பு கணக்குகள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தாமதமின்றி சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசின் கூட்டுறவு திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறை. வருகைப் பதிவு போன்றவை ஆய்வு செய்தார்கள். மாணவர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவின் தரத்தினை சாப்பிட்டு பார்த்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகைப்பதிவு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்து இருப்பு. ஆய்வக வசதிகள், தூய்மை மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு தரமான மற்றும் தாமதமில்லாத மருத்துவ சேவை வழங்க அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.இவ்வாய்வின்போது. டிஆர்ஓ பூங்கொடி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா, வட்டாட்சியர் விஜய ராகவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


