Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

வேப்பூர், டிச. 9: குடும்ப பிரச்னையால் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(35). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்யா (24). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில், நேற்று காலை அன்பழகனுக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முடிந்து அன்பழகன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், அவரது மனைவி நித்யா, தனது 2 குழந்தைகளான அனிஷ் (5), கோபிகா (2) ஆகியோருடன் அப்பகுதியிலுள்ள கிராம பொது கிணற்றுக்கு சென்றார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்‌. சிறிது நேரம் சென்றபிறகு, கிணற்றில் மிதந்த 3 பேரின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள், வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திட்டக்குடி டிஎஸ்பி மோகன், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, அன்பழகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.