திருப்பூர்,ஜூலை9: திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பொதுமக்கள் பலரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதனால் தாங்கள் வசித்து வரும் பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என செல்வராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.மேற்கண்ட பகுதியில் நீர்வளத்துறை, குடிசை மாற்று வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பட்டா வழங்க எந்த தடையும் இல்லை எனக் கூறினர்.
இதனால் விரைவில் அந்த பகுதி பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே சுகுமார் நகரில் செல்வராஜ் எம்.எல்.ஏ மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.