சோழவந்தான், நவ. 13: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கார்த்திக் (30). இவர் பள்ளபட்டி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஊர்காலன் மகன் தினேஷ்குமார் (20) என்பவரும், சொந்த வேலையாக நேற்று சோழவந்தான் வந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை டூவீலரில் மீண்டும் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தனர். சோழவந்தான் பகுதியில் கருப்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த லாரி அவர்களின் டூவீலர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தினேஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், எஸ்.எஸ்.ஐ அழகர்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தஞ்சாவூர் மாவட்டம் கோவில்பத்து அண்ணா காலனியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரை தேடி வருகின்றனர்.
