மதுரை, ஜூலை 27: மதுரையில் வனத்துறை தரப்பில் நடப்பாண்டு வழங்கப்படுவதற்காக 2 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் துவங்கி உள்ளன. தமிழகத்தின் வனம் மற்றும் பசுமை போர்வையை அதிகரிக்கும் விதமாக விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவற்றை வளர்ப்பதை கண்காணிக்கும் விதமாக பசுமை தமிழ்நாடு இயக்கம், பல்லுயிர் பசுமையாக்கல் திட்டம் ஆகியவை தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இத்திட்டங்களின் கீழ் மரக்கன்றுகளை வழங்குவதற்காக உசிலம்பட்டி, சோழவந்தான், மதுரை மாவட்ட விரிவாக்கம், திருமங்கலம் மற்றும் மதுரை சமூக காடுகள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகளை தயார் செய்வதற்காக நர்சரிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
செம்மரம், மகாகனி, வேம்பு, புங்கம், பூவரசு, நாவல், தேக்கு, தைலமரம், மகிழம், நீர்மருது, புளி, கொய்யா, சப்போட்டா, பலா, கடம்ப மரம், கொன்றை, முருங்கை, ஆலிவ், பாதாம், வாகை, சந்தனம் என 25க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 2 லட்சம் மரக்கன்றுகளை தயார் செய்யும் பணிகள் துவங்கி உள்ளதாகவும், அரசு தரப்பில் இருந்து கூடுதலாக மரக்கன்றுகள் தயார் செய்வது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கட்டால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.


