திருமங்கலம், ஜூலை 27: திருமங்கலம் அருகே மேலக்கோட்டையை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி பாண்டியம்மாள் (65). இவர்களது மகன் ரமேஷ். சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். போஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். பாண்டியம்மாள் மேலக்கோட்டையில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஜூலை 23ம் தேதி அவருக்கு மகன் ரமேஷ் போன் செய்தார். ஆனால் போன் ரொம்ப நேரம் எடுக்காமல் இருக்கவே அக்கம்பக்கதினரை போனில் தொடர்பு கொண்டு தனது தாய் போன் எடுக்கவில்லை என கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது பாண்டியம்மாள் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ரமேஷிற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ரமேஷ் மற்றும் உறவினர்கள் மேலக்கோட்டைக்கு வந்து பாண்டியம்மாளின் இறுதி சடங்கை நடத்தினர். நேற்று முன்தினம் வீட்டை சுத்தம்படுத்தும் போது பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவரவே அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நேற்று ரமேஷ் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

