Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோச்சடை மெயின் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி

மதுரை, ஜூலை 23: மதுரை கோச்சடை மெயின்ரோட்டில் கடந்த 2 மாதமாக கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதுரை, கோச்சடை மெயின் ரோட்டில் முத்தையா கோயில் எதிரில் பாதாளச்சாக்கடையில் கடந்த 2 மாதங்கள் முன்பு அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி சாலையில் தேங்கி வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன், தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி நோய்கள் அதிகரித்துள்ளன. இந்த சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிக மோசமாக இருக்கிறது. காலை, மாலையில் பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பும் மாணவர்களால் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது.

இந்த கழிவுநீர் துர்நாற்றத்தால் இப்பகுதியில் இருக்கும் வீடுகளின் கதவுகளை பொதுமக்கள் மூடியே வைத்திருக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அடைப்பை சரி செய்தாலும், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடத்துவங்குகிறது. பம்பிங் ஸ்டேஷன்களை மாநகராட்சி சீரமைக்காததால், அடைப்பு ஏற்பட்டு தெருவில் ஆறாக கழிவுநீர் ஓடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த பிரச்னை குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த இரு மாதங்களாக பீறிட்டு வெளியேறும் கழிவுநீரால் இங்குள்ள வீடுகளில் குடியிருப்போர் அடையும் துயரத்திற்கு அளவில்லை. இந்த பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க ேவண்டும். இல்லாவிட்டால், இப்பகுதியில் குடியிருப்போர் ஒன்று திரண்டு மாநகராட்சியை கண்டித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்’ என்றனர்.