விரிவாக்கத்திற்கு முன்பாக செலுத்தப்பட்ட குடிநீர் கட்டணம் பறிபோகுமா..? மாநகராட்சி ஏற்க மக்கள் கோரிக்கை
மதுரை, ஆக. 21: மாநகராட்சியின் 72 வார்டுகள் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த 28 வார்டுகளின் மக்கள் 2011ல் செலுத்திய குடிநீர் இணைப்புக் கட்டணத்தை மாநகராட்சி ஏற்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். மதுரை மாநகராட்சி 72 வார்டுகளில் இருந்து 100 வார்டுகளாக 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவ்வகையில் ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி பேரூராட்சிகள், திருப்பாலை உள்ளிட்ட 16 ஊராட்சிகள் மாநகராட்சி எல்லைக்குள் இணைந்தன இந்த கூடுதல் பகுதிகள் 28 வார்டுகளாக மாற்றம் ெசய்யப்பட்டன. இந்த புதிய வார்டு பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை இணைப்புகளுக்கு மாநகராட்சி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்நிலையில், 28 வார்டுகளில் பலரும் 2011க்கு முன்பு குடிநீர் இணைப்புக்கு ரூ.6,100 கட்டணம் செலுத்திய நிலையில், அவர்களுக்கான இணைப்புகள் வழங்காத நிலை இருக்கிறது. இதற்கிடையே, தற்போது மாநகராட்சியில் செலுத்தும் குடிநீர் இணைப்புக் கட்டணத்தில் 2011க்கு முன் தாங்கள் செலுத்திய ரூ.6,100 தொகையை சரிசெய்ய வேண்டும் என, ஒரிஜினல் ரசீதுகளுடன் மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் இருந்து இதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுக்கும் பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றனர். இதன்பேரில் அரசும், அதிகாரிகளும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



