Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிராமங்களுக்கு இயக்கப்படும் பாழடைந்த அரசு பேருந்துகள் பயணிகள் கடும் அவதி

மதுரை, ஜூலை 21: மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு பாழடைந்த நிலையில் இருக்கும் பழைய அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உள்ள 16 பணிமனைகளில் இருந்து 675 மாநகர் பேருந்துகள், 239 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 100க்கும் மேற்பட்ட பழைய நகரப் பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி தகர டப்பாக்களாக இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி செக்கானூரணி, அச்சம்பத்து, திருப்புவனம், திருமங்கலம், களிமங்கலம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் இந்த சேதமடைந்த நிலையில் இருக்கும் பேருந்துகள் ஓடுகின்றன.

வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர் உள்ளிட்ட பல கிராமங்களில் காலவாதியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு பல ஆண்டுகள் இயக்கப்பட்டு, தனது வாழ்நாளை இழந்த பேருந்துகள் பரிதாப நிலையில் பல கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது. இவற்றில் சில அடிக்கடி பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நிற்கும். சிலவற்றின் கூரை காற்றில் பறக்கும். பலவற்றில் மழைநீர் ஒழுகும். அடிக்கடி முகப்பு விளக்குகள் எரியாது என்பன உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளுடன் இவை தங்கள் பயணத்தை பயணிகளுக்காக தற்போதும் தொடர்கின்றன. இவை நடுவழியில் நின்றால், பயணிகள் இறங்கி காத்திருந்து மாற்றுப்பேருந்துகளில் தங்கள் பயணத்தை தொடர வேண்டும். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறன்றனர்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘போக்குவரத்து கழகத்தில் நிதி நெருக்கடி, உதிரி பாகங்கள் கொள்முதல் தாமதம், பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதால், பழைய பேருந்துகளை படிப்படியாக மாற்ற வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை தொடர்கிறது. இதனால் விரைவாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 2009ம் ஆண்டிற்கு பிறகு மாநிலம் முழுவதும் வாரிசு வேலை வழங்கப்படவில்லை. இதன்படி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். அவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்றனர்.