சோழவந்தான், ஆக. 10: மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் சோழவந்தான் பகுதியில் வறட்சியால் வைகை ஆறு வறண்டு பாலைவனமாக மாறியதால் விவசாயிகள் வேதனையில் வாடிய நிலையில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சோழவந்தான் பகுதி முற்றிலும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது. இங்கு நெல், வாழை, வெற்றிலை, தென்னை என பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்றாலும், நெல் விவசாயம் அதிகம் நடைபெறும். முப்போகம் நெல் விளையும் பூமி என்பதால் சோழவந்தான் மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது. மற்ற ஊர்களில் வறட்சி நிலவினாலும், சோழவந்தான் வைகை ஆற்றில் ஓரளவாவது தண்ணீர் ஓடும். இதனால் தான் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை வைகையாற்றில் 50க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் உள்ளன. இதன்மூலம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமன்றி மதுரை, திருமங்கலம், அவனியாபுரம், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இங்கிருந்து குடிநீர் செல்கிறது. ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது
+
Advertisement



