மதுரை, ஆக.5: மதுரை மாநகராட்சிக்கான உதவி மைய எண்களை அழைத்தால் ‘ரெஸ்பான்ஸ்’ உடனே கிடைப்பது நிறைவளித்தாலும், புகார் மீது ஒரு வேலையும் நடக்காததும், உரிய தொடர் பதில் கிடைக்காததும் பொதுமக்களை அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. மதுரை மாநகராட்சியானது ‘ஒரே அழைப்பு, உடனடி நடவடிக்கை’ என்ற அறிவிப்புடன், உதவி மையத்திற்கான எண்களாக செல்போன் புகாருக்கு 90039 90030 என்ற எண்ணையும், வாட்ஸ் அப்பிற்கென 9600112811 என்ற எண்ணையும் அறிவித்துள்ளது. சாலைகள் பராமரிப்பு, மின் விளக்கு பழுது, குப்பை அகற்றுதல், மழைநீர் தேங்குதல், கழிவுநீர் அடைப்பு, பூங்கா மற்றும் பசுமை பராமரிப்பு, கொசு ஒழிப்பு, மரம் பராமரிப்பு உள்ளிட்ட எந்த புகார்களையும் பதிவு செய்யலாம். விரைவான நடவடிக்கை வெளிப்படையான சேவை வழங்குவோம் என்று இணைய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி வார்டுகளின் பொதுமக்கள் கூறும்போது, ‘மதுரை மாநகராட்சிக்கு எந்த புகாரை அனுப்பினாலும், பேசினாலும் உடனடி இணைப்பில் ‘ரெஸ்பான்ஸ்’ செய்கின்றனர். புகார் ஏற்கப்பட்டதாக எஸ்எம்எஸ் அல்லது போன் பதில் தகவல் தரப்படுகிறது. இது நிறைவளித்தபோதும், அதற்கடுத்து எந்த தீர்வோ, பணி செய்த தகவலோ எதுவும் கிடைப்பதில்லை. பலமுறை திரும்பத்திரும்ப புகார்களை அனுப்பினாலும், ஏற்கப்பட்டதற்கான அதே ஸ்எம்எஸ் அல்லது போன் தகவல் திரும்பவும் தரப்படுகிறது. எப்படியும் புகார் மீது நடவடிக்கை இருக்கும் எனக் காத்திருந்தாலும் தீர்வு ஒருபோதும் கிடைப்பதில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் தரும் புகார்களுக்கு உடனே ஏற்கப்பட்டதாக தரப்படும் தகவல் ஆறுதலாக இருப்பினும், அதற்கான தீர்வு கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது. கமிஷனர் கௌரவ் குமார் சிறப்பு நடவடிக்கையாக தனி குழு அமைத்து புகார்கள் மீது விரைந்த நடவடிக்கை எடுப்பதுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கையை அந்தந்த புகார்தாரருக்கு அதே எண்ணில் தெரிவிக்கும் உத்தரவை மேற்கொள்வது அவசியம்’ என்றனர்.

