Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலூர் டூ மாட்டுத்தாவணிக்கு செல்லும் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

மேலூர், ஜூன் 2: மேலூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் தனியார் பஸ்களில் பயணக் கட்டணம் இதுவரை ரூ.15 என இருந்த நிலையில், நேற்று முதல் ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு மாணவர்கள், தினசரி வேலைக்கு செல்வோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. அதே வேளையில், மதுரையில் இருந்து மேலூர் திரும்பும் பயணிகளுக்கு சமமான உரிமை வழங்கப்படுவதில்லை. பஸ் நிலையத்தில் மேலூர் பயணிகள் முன் கூட்டியே பஸ்சில் ஏறி இருக்கையில் அமர அனுமதிக்கப்படாமல், பஸ் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் பெரும்பாலான மேலூர் பயணிகள் முழுப் பயணத்தையும் நின்றபடியே மேற்கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. மேலூரை தாண்டி செல்லும் நீண்ட தூரப் பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்கள் முன் கூட்டியே ஏறி இருக்கைகளில் அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், தினமும் பயணம் செய்யும் மேலூர் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்னைக்கு எந்த அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.

ஒருபுறம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் பயணிகளுக்கு அடிப்படை இருக்கை வசதியும் சம உரிமையும் மறுக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது என பயணிகள் தெரிவித்தனர். உடனடியாக பஸ் பயணக் கட்டணத்தை மீண்டும் ரூ.15ஆக குறைக்க வேண்டும். மேலூர் பயணிகளுக்கு சமமான முறையில் பஸ்சில் முன் கூட்டியே ஏறி இருக்கையில் அமர வாய்ப்பு வழங்க வேண்டும். முக்கிய நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.