கிருஷ்ணகிரி, ஆக. 26: கிருஷ்ணகிரியில், மாணவிகளுக்கு மாவட்ட அளவில் இறகு பந்து மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில், மாவட்ட அளவில் பெண் குழந்தைகளுக்கான இறகு பந்து மற்றும் சிலம்பம் போட்டிகள், வருகிற 28ம் தேதி காலை 8.30 மணிக்கு நடக்க உள்ளது.
பெண் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், கல்வியுடன் விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கிலும், இந்நிகழ்ச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இறகு பந்து போட்டியில், 14 மற்றும் 17 வயது பிரிவினருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவிலும், சிலம்பப் போட்டியில் 14 வயதுப் பிரிவில், 30, 35, 40 மற்றும் 40க்கும் மேற்பட்ட எடை பிரிவிலும், 17 வயது பிரிவில் 35, 40, 45, 50, 60 மற்றும் 60க்கும் மேற்பட்ட எடை பிரிவிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



