போச்சம்பள்ளி, ஆக. 19: போச்சம்பள்ளியில் மண் கடத்திய பொக்லைன், 3 டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். போச்சம்பள்ளி தாலுகாவில் அரசு அனுமதியின்றி மண் கடத்துவது வாடிக்கையாக உள்ளது. ேபாலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட நாகலேரி ஏரியில், சட்ட விரோதமாக மண் கடத்தப்பட்டு வருவதாக, மோட்டூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகலேரி ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு பொக்லைன் மூலம் 3 டிராக்டர்களில் மண் கடத்துவது தெரிய வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அங்கு மண் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும், வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து மண் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட பொக்லைன் மற்றும் 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.




