போச்சம்பள்ளி, ஜூலை 9: தர்மபுரி- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில், வேரோடு புளியமரம் சாய்ந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், தர்மபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த தீபக்(45) என்பவர் மீது மரம் விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தீபக்கின் டூவீலர், மரத்தின் அடியில் சிக்கி முழுவதும் நொறுங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
+
Advertisement
