Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கிணத்துக்கடவு அருகே 6 கல்குவாரிகளை மூட கலெக்டர் உத்தரவு; விவசாயி போராட்டம் முடிவுக்கு வந்தது

கிணத்துக்கடவு, ஜூலை 31: கிணத்துக்கடவு அருகே 6 கல்குவாரிகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து, விவசாயி மேற்கொண்ட 9 நாள் உண்ணாவிரத போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், நெம்பர் 10 முத்தூர் ஊராட்சியில், அரசு கல்குவாரிகள் உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் அடிக்கடி வெடி வைப்பதால், கற்கள் பறந்து வந்து, அருகிலுள்ள வீடுகள் மீதும், கால்நடைகள் மீதும் விழுவதால், விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால், கல்குவாரிகளை மூட வேண்டும் என்று நீண்ட காலமாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், நெம்பர் 10 முத்தூர் கிராமம், புல எண் 98 மற்றும் 95 ல் உள்ள அரசு புறம்போக்கில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும், கல்குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடிகளை வைப்பதால், அச்சுறுத்தல் ஏற்படுகிறது. விவசாயம் பாதித்து வருகிறது. அனுமதித்த அளவை விட, அதிகமான கனிமங்களை வெட்டி எடுத்து சட்டவிரோதமாக, கேரளாவுக்கு கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது முறையாக ஆய்வு செய்து, அளவீடு செய்து, அபராதம் விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெம்பர் 10 முத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தனது வீட்டில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவரை அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினர் பலமுறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கல்குவாரிகள் செயல்படுவதை ரத்து செய்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கை விடுவேன் என உறுதிபட தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், நெம்பர் 10 முத்தூர் பகுதிக்கு வந்த பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, அங்கு செயல்பட்டு வரும் கல்குவாரிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமாருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து, நெம்பர் 10 முத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் 6 தனியார் கல்குவாரிகளுக்கு தடை விதித்து கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகலை, கிணத்துக்கடவு தாசில்தார் வாசுதேவன், விவசாயி முருகானந்தத்தை நேரில் சந்தித்து நேற்று கொடுத்தார். இதனைத்தொடர்ந்து, 9 நாட்களாக கடைபிடித்து வந்த உண்ணாவிரத போராட்டத்தை முருகானந்தம் கைவிட்டார். இந்நிலையில் விவசாயி ஒருவரின் போராட்டத்தால் 6 கல்குவாரிகளுக்கு கலெக்டர் தடை விதித்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.