Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகளிர் உரிமைத்தொகை கேட்டு குவிந்த பெண்கள்

கோவை, ஜூன் 30: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்க குவிந்தனர். ஒரே நேரத்தில் பலர் மனு அளிக்க வந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, மகளிர் உரிமைதொகை விண்ணப்பத்தை பதிவுசெய்ய தனியாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டது. அங்கு 5 அரசு ஊழியர்கள், பெண்களிடமிருந்து மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பெற்று, ரசீது வழங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான பெண்கள் குவிந்ததை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இம்முகாமில், இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட தலைவர் தசரதன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், ‘’போத்தனூர் செட்டிபாளையம் சங்கமம் நகரில் எவ்வித அரசு அனுமதியும் பெறாமல், 2 மசூதிகள் கட்டப்பட்டு வருகிறது. குனியமுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, சில தனியார் அமைப்புகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அனுமதியின்றி கட்டப்படும் வழிபாட்டு தலங்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும்’’ எனக்கூறியுள்ளனர்.

காரமடை தோலாம்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘’எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையால் பெண்கள், மாணவிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மது பிரியர்கள் போதையில் ஆபாசமாக பேசுகின்றனர். எனவே இந்த பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகயை அகற்ற வேண்டும்’’ எனக்கூறியுள்ளனர். அனைத்து சமூக மக்கள் பேரவையினர் அளித்த மனுவில், ‘’மாவட்டத்தின் பல பகுதிகளில் பேக்கரிகள், கடைகளில் விற்பனை செய்யப்படும் திண்பண்டங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இல்லை. இதனால் காலாவதியான கெட்டுப்போன உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டியுள்ளது. இவற்றை தடைசெய்ய வேண்டும்’’ எனக்கூறியுள்ளனர்.