Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் மலைபோல குவிந்த குப்பைகள்; முகம் சுளிக்கும் பக்தர்கள்

மேட்டுப்பாளையம், ஜூன் 29: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் மலைபோல குவிந்த குப்பைகளால் பக்தர்கள் முகம் சுளித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தினமும் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே 22 டன் குப்பைகள் தோராயமாக சேகரமாகின்றன. இவ்வாறு சேகரமாகும் குப்பைகள் தூய்மை பணியாளர்களால் தரம் பிரிக்கப்பட்டு மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் சிராஜ் நகர் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வருகின்றன் அங்கும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் திருச்சியில் உள்ள சிமெண்ட் பேக்டரிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனிடையே கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு கோவை,திருப்பூர்,நீலகிரி,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.அவ்வாறு செல்லும் பக்தர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறை சாலை வழியாக சத்தியமூர்த்தி நகர்,உப்பு பள்ளம், சமயபுரம், வெல்ஸ்புரம் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் இப்பகுதிகளின் சாலையோரம் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன.இதனால் இந்த குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு,தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தங்களுக்கு தேவையான உணவை தேடும் போது குப்பைகள் சாலை முழுவதும் சிதறி வருகின்றன. மேலும், கால்நடைகள் குப்பைகளில் உணவை தேடும் போது சாலைகளிலேயே உலா வருகின்றன.

மேலும்,வாகன போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தபடியே செல்லும் அவல நிலை நிலவி வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் இச்சாலை மட்டுமல்லாது நகரின் பல்வேறு பகுதிகளில் மலை போல தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி பொது சுகாதாரம் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது.

வீடுகளை தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இருந்தாலும் பொதுமக்களில் சிலர் அவற்றை கண்டும் காணாதது போல சாலையோரங்களில் வீசி செல்கின்றனர். அவற்றில் சில இடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் நகராட்சி தரப்பில் சுத்தம் செய்து குப்பை கொட்ட தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைத்திருந்தாலும் அதையும் ஒரு சிலர் கண்டு கொள்வதில்லை. சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இதுபோன்று பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து உடனடியாக அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.