2006 சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டவை பழுதடைந்த இவிஎம் மெஷின் பேட்டரிகள் ஸ்ட்ராங் ரூமிற்கு மாற்றம்
கோவை,ஆக.26: கோவை மாவட்டத்தில் கடந்த 2006 முதல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இவிஎம் மெஷின்களில் பயன்படுத்தப்பட்ட பழுதடைந்த பேட்டரிகள், ஸ்ட்ராங் ரூமிற்கு பாதுகாப்பாக நேற்று மாற்றம் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்த பேட்டரிகள் பழுதடைந்த நிலையில், அவை வடகோவை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அந்த பள்ளியில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தேர்தல் தொடர்பான பழைய பேட்டரிகளை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, வடகோவை மாநகராட்சி பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வந்த 2006, 2011 மற்றும் 2017-ம் ஆண்டு தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய பேட்டரிகள், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தின் ஸ்ட்ராங் ரூமுக்கு மாற்றப்பட்டன.
இந்த பேட்டரிகளை மாற்றும் பணிகள் தேர்தல் விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேட்டரிகள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் பேட்டரிகள் உப்பிலிபாளையத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ”தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அவற்றின் உதிரி பாகங்கள்,பேட்டரிகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவது வழக்கம்.
குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னரும் விதிமுறைகளின்படி அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், வடகோவை மாநகராட்சி பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய தேர்தல் பேட்டரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ட்ராங் ரூமுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கூறும் வரையில் இவை பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். பின், அவர்களின் உத்தரவின் பேரில் அவை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைத்து அழிக்கப்படும்” என்றனர்.



