பெ.நா.பாளையம், ஆக.8: கோவை வரப்பாளையம் அருகே யானை தாக்கி படுகாயம் அடைந்த பெண் தோட்ட தொழிலாளி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை தடாகம் அருகேயுள்ள வரப்பாளையம் கனகராஜ் தோட்டத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி பாப்பாள் (55). இவர்கள் கடந்த 8 வருடங்களாக இங்கு குடியிருந்து கொண்டு தோட்ட வேலை செய்து வருகிறார். நேற்று காலை 4 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க வீட்டின் கதவை திறந்து பாப்பாள் வெளியே வந்துள்ளார்.
அப்போது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த காட்டு யானை பாப்பாளை தாக்கியுள்ளது. உடனே பாப்பாள் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு கணவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்து அந்த யானையை விரட்டினர். ஆனால், அதற்குள் யானை தந்தத்தால் முட்டியதில் வயிறு மற்றும் வலது தொடையில் பலத்த காயம் அடைந்த பாப்பாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார், வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.



