Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சிறுமுகை அருகே முறைகேடாக வண்டல் மண் எடுத்து விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம், ஜூலை 6: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு விவசாய தேவைகளுக்காக தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று லிங்காபுரம், பெத்திக்குட்டை, புதுக்காடு உள்ளிட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிகளில் வண்டல் மண்ணை டிப்பர் லாரிகளில் எடுத்துச்சென்றனர். வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் மாலை நேரம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வண்டல் மண் எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தனர்.

இதனை விவசாய பயன்பாட்டிற்காக மண் எடுத்துச்சென்ற விவசாயிகள் முறையாக பின்பற்றி வருகின்றனர். ஆனால், இதில் குறுக்கே புகுந்து லாபம் பார்க்கும் நோக்கில் சில வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் டிப்பர் லாரிகளில் வண்டல் மண் எடுக்க தொடங்கினர். மேலும், மாலை 4 மணிக்கு பின்னரும் இருட்டு வேளைகளில் லாரிகள் வரிசை கட்டி நின்றன. லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரத்துடன் செல்வதால் சாலைகள் சேதமடைவதோடு, புழுதி காற்று பறந்து சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இருந்தாலும் வியாபாரிகள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வண்டல் மண்ணை அள்ளிச்செல்கின்றனர். எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுப்பது விவசாயிகள்தானா? என்பதை உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய அனுமதி, பர்மிட் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றும் செல்லும் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.