கோவை,ஜூன்2: கோவை மாவட்டத்தில் சுமார் 95,000 ஆயிரம் எக்டர் பரப்பில் தென்னை பிரதான பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் தொண்டாமுத்தூர், காரமடை போன்ற பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்கள் வாடல் நோய் தாக்கம் தென்னை தோப்புகளில் காணப்படுகிறது.
மேலும் தற்சமயம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் வெள்ளை ஈக்களின் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இந்த ஈக்களானது தென்னை மரங்களின் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாரை உறிஞ்சி இலைகளின் பச்சையம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை நடைபெறுவதை தடுப்பதால் காய்களின் மகசூல் குறைந்து வருகிறது. இலைகளின் மேல் கருப்பு பூஞ்சானம் படர்ந்து நோய் ஏற்படுத்தி வருகிறது. எனவே வெள்ளை ஈக்கள் மற்றும் வாடல் நோய் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பணிகளை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


