Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து ஒருவர் தர்ணா, பரபரப்பு

கரூர், ஜூலை 28: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகம் முன்பு, தனது பூர்வீக சொத்துகள் மற்றும் பணம் உள்ளிட்ட செல்வங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை பூர்வீகமாகக் கொண்ட ராகவேந்திரா, தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவரது பூர்வீக சொத்துகள், பணம் மற்றும் இதர செல்வங்களை சிலர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.இதனால் மனவேதனை அடைந்த ராகவேந்திரா, திங்கள்கிழமை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ராகவேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆரம்பத்தில் போராட்டத்தை கைவிட மறுத்த ராகவேந்திராவை, காவல்துறையினர் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவரையும், அவரது தாயாரையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்று, மனுவை பெற்று விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.இந்த சம்பவம் காரணமாக கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.