Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோரைப்புற்கள் அறுவடை தீவிரம்; கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தார்ச்சலை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்

லாலாப்பேட்டை, ஜூன் 23: லாலாப்பேட்டை அருகே கே.பேட்டையில் தார் சாலை அமைக்க காலம் தாழ்த்தி வரும் அரசு அதிகாரிகளை கண்டித்து சீகம்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கே.பேட்டை ஊராட்சி சீகம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை புதிய தார்ச்சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் துவங்கப்பட்ட பின்னர் சாலை அமைக்க ஏற்கனவே இருந்த சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்தப் பணிகளும் மேற்கொள்ளவில்லை. எனவே அந்த சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள் என பலரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

தற்போது கூட பள்ளி மாணவர்கள் இருவர் மற்றும் பெண் ஒருவர் கீழே நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை அளித்த போதிலும் சாலையை அமைப்பதற்கு மேற்கொண்டு எந்த பணிகளும் துவங்கவில்லை. மேலும் மக்களின் கோரிக்கைகளை காதில் கூட கேட்டுக் கொள்ளாமல் மிகுந்த அரசியல் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்டால் கூட பொதுமக்களிடம் அதிகார போக்குடன் பதில் கூறியும் வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார் விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து பேசி சாலை பணிகளை விரைந்து முடிக்க கூறுவதாக உறுதி அளித்ததை எடுத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் வந்த குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளர், கே.பேட்டை ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதித்தது.