Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் ஒரே நாளில் ரூ.6.15 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், ஏப்.22: கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 21 பறக்கும் படைகளும், 24 நிலையான கண்காணிப்புப் படைகளும் அமைக்கப்பட்டுத் தேர்தல் விதிமுறை மீறல்கள், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 20ம் தேதி காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 6 லட்சத்து 15 ஆயிரத்து 990 ரூபாய் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் ஒரு கோடியே 17 லட்சத்து 71 ஆயிரத்து 560 ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக அதிகபட்சமாக விளவங்கோடு தொகுதியில் ரூ.32,33,560 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குளச்சல் தொகுதியில் ரூ.22,32,250 தொகையும், கன்னியாகுமரியில் ரூ.20,33,920 தொகையும், நாகர்கோவில் ரூ.18,99,340ம், கிள்ளியூர் ரூ.17,29,790ம் மற்றும் பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.6,42,700ம் கைப்பற்றப்பட்டுள்ளன.