Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிள்ளியூரில் பாஜக போர்வையிலே ஒளிந்து கொண்டு நிற்கிறார் தாமரைக்கு பதிலடி கொடுத்து டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் காங். வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து செல்வபெருந்தகை பிரசாரம்

கருங்கல், ஏப்.11: குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிள்ளியூர் ராஜேஷ்குமார், விளவங்கோடு பிரவீன், குளச்சல் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நேற்று பிரசாரம் செய்தார். கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமாரை ஆதரித்து தொலையாவட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸோடு பின்னிப் பிணைந்திருக்கின்ற மாவட்டம் குமரி மாவட்டம். போட்டியே இல்லாமல் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெறுகிறது என்றால் இந்த மூன்று தொகுதிகள் மட்டும்தான். மூன்றாவது முறை பிஜேபி ஆட்சி செய்தாலும், உண்மைகளைப் போட்டு உடைப்பதில் நம்முடைய தலைவர் ராகுல் காந்திக்கு நிகரான தலைவர் யாரும் இந்தத் தேசத்தில் இல்லை என்று இந்த தேசத்தின் முகமாகவும், இந்த தேசத்தின் குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறார். ஆகவேதான் இந்திய மக்களுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை, எந்தப் பிரச்னை நடந்தாலும் அநியாயங்கள் நடந்தாலும் தட்டிக்கேட்பதற்கு ஒரு மனிதன் இருக்கிறார், ஒரு தலைவன் இருக்கிறார், அவர்தான் தலைவர் ராகுல் காந்தி என்ற பிடிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது.

சட்டப்பேரவையில் கிள்ளியூர் பற்றி நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ந்து போராடி வாதாடி இங்கே பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். சமூக நலனும் பொருளாதார வளர்ச்சியும் இரண்டு கண்கள் என்று சொல்லுவார்கள். அந்த அடிப்படையிலே கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 1000 ரூபாய் உரிமைத் தொகை 2000 ரூபாயாகக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். வீடுகள்தோறும் இல்லத்தரசிகள் பொருள் வாங்குவதற்கு 8000 ரூபாய் கூப்பன் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்.காலை உணவுத் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கிறது, அதை எட்டாம் வகுப்பு வரை நீட்டிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

நம்முடைய புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டம் - கல்லூரிப் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்ற அடிப்படையிலே 1000 ரூபாய் மாதந்தோறும் கொடுத்து வந்த உதவித்தொகை இப்போது 1500 ரூபாய் ஆக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மீனவர்களுக்கு மீன் பிடித் தடைக் காலத்தில் 8000 கொடுத்து வந்ததை இப்போது 12,000-ஆக உயர்த்தி வழங்கப் போகிறோம் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆகவே நல்லாட்சி தொடர மக்களுக்காகப் போராடுகின்ற நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இங்கே யார் நமக்கு எதிரே நிற்கிறார்கள்? நம் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு, கட்சியைப் பிளவு செய்து, பாஜக போர்வையிலே ஒளிந்துகொண்டு அவருடைய சின்னத்திலே வேட்பாளர் நிற்கிறார். ஆகவே இந்தத் தேர்தலிலே தாமரைக்கு பதிலடி கொடுத்து டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.