குளச்சல், ஜன.8: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலூர் சி.எஸ்.ஐ சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாமை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. ஐ.ஆர்.இ.எல் துணை பொது மேலாளர் (மனிதவள மேலாண்மை) பிரசாத், துணை பொது மேலாளர் (உற்பத்தி) பிஜு தலைமை வகித்தனர். கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், பாலூர் சபை செயலாளர் டாக்டர் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கண்புரை நோய், சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தை கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் வெள்ளெழுத்து பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 435 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 227 பேருக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. பாலூர் சி.எஸ்.ஐ சபை உறுப்பினர்கள், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழு, செவிலியர்கள், ஐ.ஆர்.இ.எல் நிறுவன பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

