Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நாகர்கோவில் - கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில், மே 1: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்றுடன் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடக்கிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும், பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் தொடங்கி நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் தேரடி வீதிகளில் வலம் வந்தது. நிகழ்ச்சியில் மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, விஷ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்கள் காளியப்பன், நாகர்கோவில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரவு சப்தாவர்ணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

10ம் திருவிழாவில் இன்று (1ம் தேதி) மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து குதிரை சாரட் பவனி, அலங்கார குதிரை பவனி, சிறப்பு பஞ்சாரி மேளம், அலங்கார காவடி, செண்டை மேளத்துடன் வயலின் இசை நிகழ்ச்சி ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மாலை 6 மணிக்கு ஆராட்டு பூஜை முடிந்து சுவாமி ஊர்வலம் தொடங்கி இரவு 9 மணிக்கு கோயிலை வந்தடைகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.