Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.27 லட்சம்

காஞ்சிபுரம், நவ.15: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.27 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர் வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, செல்வது வழக்கம். இவ்வாறு, கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்திவிட்டு செல்வார்கள்.

அவ்வாறு ஏகாம்பரநாதர் கோயிலில் 10 பொது உண்டியல்கள், கோசாலை உண்டியல் ஒன்று, திருப்பணி உண்டியல் ஒன்று என மொத்தம் 12 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோயில்கள் ஆய்வாளர் அலமேலு, கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில், கோயில் பணியாளர்களும், தன்னார்வலர்களும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ரூ.27 லட்சத்து 11 ஆயிரத்து 585 ரொக்கம், 5 கிராம் 150 மி.கிராம் தங்கம், 101 கிராம் 700 மி.கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கையாக கிடைத்த பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.