சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு
குன்றத்தூர், நவ.12: சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு மீண்டும் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி நடப்பாண்டில் பெய்த வடகிழக்கு பருவமழையால் 73 சதவீதம் நிரம்பியது. சோழவரம் ஏரிக்கரைகள் பலப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் 73 சதவீதம் தண்ணீர் நிரம்பி இருப்பதால், சோழவரம் ஏரியில் இருந்து நீர்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் புழல் ஏரிக்கு தண்ணீரை திறந்துள்ளனர். அதன்படி, சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 777 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 16.56 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது.
சோழவரம் ஏரிக்கு 27 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதேபோல 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2872 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 19.3 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உள்ளது. புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 155 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 278 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 184 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு இல்லை. தொடர்ந்து, 24 மணி நேரமும் ஏரிக்கான நீர்வரத்து குறித்து கண்காணித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.