Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரோம்பேட்டையில் நெரிசலை ஒழுங்குபடுத்தாமல் ரோந்து வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஹாயாக புகைப்பிடித்த இன்ஸ்பெக்டர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தாம்பரம்: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பிரபல நிறுவனங்களின் துணிக்கடை, நகைக்கடை, உணவகங்கள், திரையரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. புறநகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கடைகளுக்கு வந்து செல்வதால், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர்.

ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் உள்ள கடைகளுக்கு வருபவர்கள், தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை, என்று கூறப்படுகிறது. தற்போது, பண்டிகை காலம் என்பதால், இந்த பகுதியில் கடும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலையில், பல்லாவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவ ராமஜெயம், நெரிசலை ஒழுங்குபடுத்தாமல், ரோந்து வாகனத்தில் அமர்ந்தபடி ஹாயாக புகை பிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பல்லாவரம் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள சிவ ராமஜெயம் தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளராக இருந்தபோது கூட தொடர்ந்து இதுபோல்தான் பொது இடங்களில் புகை பிடிப்பது, வாகன சோதனையின்போது புகை பிடிப்பது, பொதுமக்களிடம் புகை பிடித்துக் கொண்டே பேசுவது, புகை பிடித்துக் கொண்டு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வது போன்ற புகார்கள் பலமுறை எழுந்தது. அதுமட்டுமின்றி அவருக்கு கீழ் பணியாற்றும் சக போக்குவரத்து காவலர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், வேண்டுமென்றே கூடுதல் பணிகள் கொடுத்ததும், அவருக்கு தேவையானதை பெற்றுக் கொள்வதற்காக தாம்பரம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் கண்டுகொள்ளாமல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், தனியார் ஆம்னி பேருந்துகள் போன்றவற்றவர்களிடம் இருந்து அவருக்கு தேவையானதை மாத மாதம் பெற்றுக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதித்து போக்குவரத்து நெரிசல் குறித்து கண்டு கொள்ளாமல் இருந்தது போன்ற பல்வேறு புகார்கள் அவர் மீது உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.