Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஞ்சா விற்பனை படுஜோர்; மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி: போதை நகரமாக மாறிவரும் மாமல்லபுரம்

மாமல்லபுரம், ஜூன் 23: உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் திகழ்கிறது. மாமல்லபுரம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கற்சிற்பங்கள்தான். இங்கு, பல்லவர்கள் கைவண்ணத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இன்றைக்கும் கம்பீரமாக நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி தருகிறது. இங்கு வரும் பயணிகள் இங்குள்ள சிற்பங்களை சுற்றிப் பார்த்து கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்தும், கடற்கரையில் அமர்ந்தும், நடந்தும் பொழுதை கழிக்கின்றனர். மேலும், இங்குள்ள புராதன சிற்பங்களின் மீது ஈர்ப்பு கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீனநாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக சந்தித்து சிற்பங்களை சுற்றிப் பார்த்து பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டனர்.

இரு நாட்டு தலைவர்கள் வருகையொட்டி மாமல்லபுரம் நகரமே மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிஜொலித்தது. அப்படி, இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற இடத்தில் தற்போது கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் கடற்கரையையொட்டி மாமல்லபுரம் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது. இங்கு, பல்லவர்களால் செதுக்கப்பட்ட சிற்பங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கிருஷ்ணா மண்டபம், புலிக்குகை, கணேச ரதம், கடற்கரை கோயில் ஆகியவை உள்ளன. மேலும், 108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கும் ஸ்ரீ தலசயன பெருமாள் எழுந்தருளி உள்ளார். இதனால், கோயில் நகரம் என்ற பெருமையும் மாமல்லபுரத்திற்கு உண்டு.

இந்நிலையில், மாமல்லபுரம் கஞ்சா விற்கும் போதை நகரமாக மாறி வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை, ஒத்த வாடை தெரு, ஐந்து ரதம், அண்ணாநகர், வடக்கு மாமல்லபுரம், பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம், பூஞ்சேரி கூட்ரோடு, எச்சூர் காடு, கடம்பாடிகாடு, பையனூர், மணமை, பட்டிப்புலம் பக்கிங்ஹாம் கால்வாய், தெற்குபட்டு சவுக்குத் தோப்பு, திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளில் சந்து, பொந்துகளில் எல்லாம் கஞ்சா பொட்டலங்கள் கூவிக்கூவி அமோகமாக விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், திருப்போரூர் பகுதியில் இருந்து கோவளத்திற்கு கொண்டு வந்து கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வட மாநிலத்தில், இருந்து ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து, புரோக்கர்கள் மூலம் மாமல்லபுரத்திற்கு மொத்தமாக அனுப்பாமல், சில்லரையாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. கஞ்சா, விற்பவர்களை அவ்வப்போது மாமல்லபுரம் போலீசார் பிடித்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தாலும், 4 அல்லது 5 நாட்களில் வெளியே வந்து போலீசாருக்கு தெரியாமல் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

மேலும், மாமல்லபுரத்திற்கு வந்தால் எந்த நேரமும் அனைத்தும் கிடைக்கும் என நினைத்து, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வந்து ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்கி சகலமும் அனுபவித்து செல்கின்றனர். அப்படி, வருபவர்கள் கடற்கரையையொட்டி உள்ள ரெஸ்டாரன்ட், ரிசார்ட்டுகளை தேர்ந்தெடுத்து தங்குகின்றனர். அதேபோல், கஞ்சா விற்பவர்களுக்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பிரபல ரவுடிகள் நெருக்கமாக இருப்பதால் காட்டிக் கொடுக்க பொதுமக்கள் பயப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது.

கஞ்சாவை சின்னச்சின்ன பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அப்படி, விற்கப்படும் கஞ்சா வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து வியாபாரிகள் மூலம் மாமல்லபுரம் அனுப்பப்படுகிறது. இங்குள்ள, புரோக்கர்களிடம் வந்து சேர்ந்த பிறகு அவர்களிடமிருந்து இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கஞ்சா வாங்கி பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு, பல்வேறு அரசு பள்ளிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன.

இங்குள்ள, கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் தங்கியும், 3 அல்லது 5 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அறை எடுத்து தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கப்படுகிறது. கஞ்சா, அடிப்பவர்களுக்கு அதை பயன்படுத்திய சில நொடிகளிலேயே போதை தலைக்கு ஏறிவிடும். பின்னர், என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது. இந்த, நேரங்களில்தான் கொலை, கற்பழிப்பு, ஆள் கடத்தல், வழப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

கஞ்சா புகைப்பதால் நுரையீரல் பாதிப்பு மற்றும் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வயிற்று சம்பந்தமான பிரச்னைகள், உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்துவதால் மிக விரைவில் உயிரிழக்கும் நிலை ஏற்படும். கஞ்சாவை, புகைத்துவிட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு செல்லும்போது எந்தவித மாற்றமும் தெரியாது என்பதால் பெற்றோராலும் கண்டுபிடிக்க முடியாது.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி மாமல்லபுரம் நகரின் மீது தனி கவனம் செலுத்தி கஞ்சா விற்கும் நபர்களை பிடித்து, மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எந்த புகாருக்கும் நடவடிக்கை இல்லை

மாமல்லபுரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. சில நேரங்களில் புகாரை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொழிலாளிகளும் பாதிப்பு

ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட்களில் காலை முதல் மாலை வரை வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள், கல்லூரி படிக்கும் மாணவர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டிட வேலைக்கு செல்லும் ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள், மரம் வெட்டும் தொழிலாளர்கள் என பலரும் கஞ்சாவுக்கு அடிமையாகி, ஒருநாள் சம்பளத்தை இழப்பதோடு, மன உளைச்சளுக்கும் ஆளாகின்றனர். கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க ஆர்வம் காட்டாத மாமல்லபுரம் போலீசார் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையையும் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பெரிய தொகைக்கு விலை

மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நினைக்க முடியாத அளவுக்கு சக்கை போடு போடுகிறது. இதனை, தடுக்க வேண்டிய போலீசார் கஞ்சா வியாபாரியிடம் பெரிய தொகையை வாங்கி கொண்டு, கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக கூறப்படுகிறது.

காட்டி கொடுக்கும் போலீசார்

கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தால், கஞ்சா விற்கும் ஏஜென்டுகளிடம் தகவல் சொன்ன நபரை போலீசார் காட்டி கொடுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் நமக்கு ஏன் வம்பு என பயந்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர்.