Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீதிமன்ற உத்தரவின்படி திருப்போரூர் கோயில் நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தடை: விவசாயிகள் எதிர்ப்பு

* தீர்ப்பு வரும் வரை அனுமதிக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மே 23: திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலத்தில் பயிர் செய்ய தடை விதிக்கும் கோயில் நிர்வாகத்தின் முடிவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அங்கு விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்கள் கோயில் பெயரில் தவறுதலாக பட்டா போடப்பட்டு விட்டதாகவும், அதனால் விவசாயிகளின் பெயரில் பட்டா பெயர் மாற்ற வேண்டும் என்றும் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் சில விவசாயிகள் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வேறொரு வழக்கில் கோயில் நிலங்களை தனி நபர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு காலதாமதம் ஆனதை அடுத்து அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதால் சுமார் 230 ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே தற்போது சாகுபடிக்காக விவசாயிகள் அந்த நிலங்களில் ஏர் ஓட்டி உழவு வேலைகளை தொடங்கி வருகின்றனர். இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை தொனியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் சுவாதீனம் எடுக்கப்பட்டதால் அதில் எந்த அனுமதியும் இன்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அது நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே விவசாயிகள் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருப்போரூர் காவல் நிலையத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலங்களை விவசாயம் செய்வதுதான் தங்களின் வாழ்வாதாரம் என்றும், நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.