Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அதிக கட்டணம் வசூலித்ததை தட்டி கேட்டதால் ஆம்னி பஸ் டிரைவர், காவலர் பயங்கர மோதல்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி, மே 20: சென்னை வண்டலூர் அடுத்த, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் பணியாற்றும் காவலர் ஒருவர் வந்துள்ளார். அங்கு நின்றிருந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் ஏறுவதற்காக, அதன் டிரைவரிடம் பயண டிக்கெட்டின் விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டிரைவர் வழக்கமான கட்டணத்தை விட மிக அதிக தொகையை சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் சாதாரண நாட்களிலேயே ஏன் இவ்வளவு அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என்று டிரைவரிடம் நியாயம் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய் தகராறாக தொடங்கிய இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களில் எல்லை மீறி கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ஆம்னி பஸ் டிரைவரும், அந்த காவலரும் பொதுமக்கள் மத்தியில் நடைமேடையிலேயே ஒருவரையொருவர் சட்டையை பிடித்துக்கொண்டு பயங்கரமாக தாக்க தொடங்கினர். அங்கிருந்த சக பயணிகளும், மற்ற பேருந்து ஊழியர்களும் அவர்களை விலக்கிவிட முயன்றனர். எனினும், இருவரும் மாறிமாறி சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தற்போது அந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய அளவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.