Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குறைந்த விலைக்கு பைக் தருவதாக மோசடி; 8 பேர் கைது

குன்றத்தூர், ஜூன் 19: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் (25). இவர், போரூரில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் முகேஷ் (22). அஸ்வினுக்கு பைக் தேவைப்பட்டதால் ஆன்லைனில் பழைய பைக் விற்பனைக்கு உள்ளதாக வந்த தகவலை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு அஸ்வின் மற்றும் முகேஷ் ஆகியோர் போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதிக்கு சென்றனர். அங்கு வந்த மாங்காட்டைச் சேர்ந்த லோகேஷ் (24), என்பவர் தன்னிடம் பைக் இருப்பதாகவும், முன்பணம் கொடுத்தால் அந்த வாகனத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

பைக்கை பார்க்காமல் பணம் தர முடியாது என்று அஸ்வின் கூறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் தனது நண்பர்களை அழைத்ததன்பேரில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அஸ்வின் மற்றும் முகேஷை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து வாலிபர்களை தாக்கிய ராகுல் (28), ராஜேஷ் (20), தங்கராஜ் (24), லோகேஷ் (24), அருண் (20), விக்னேஷ்வர் (22), பாலா (21), பன்னீர்செல்வம் (25) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், ஆன்லைனில் பைக் விற்பனைக்கு இருப்பதாக போலியாக விளம்பரம் செய்து, அதனை வாங்க வருவோரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.