பவானி,ஆக.21: சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரி அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இயங்கும் தனியார் கழிவு பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு, சூரியம்பாளையம், வாசவி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் சுமார் 30 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு அருகில் சுமார் 300 குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்லூரி உள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் தனியார் பிளாஸ்டிக் கழிவு ஆலைக்கான குடோன் எனக்கூறி சுமார் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தகர கொட்டகை அமைக்கப்பட்டது. ஓரிரு மாதங்களில் கழிவு பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தி தொடங்கப்பட்டது.
இதற்காக, நகரங்களில் சேகரிக்கப்படும் பழைய பாலீத்தின் கழிவு பைகளை மொத்தமாக டன் கணக்கில் சேகரித்து வந்து, அதை உருக்கி மறு சுழற்சி செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கின்றனர். இவ்வாறு பழைய பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கும்போது வெளியாகும் கழிவுகள் காற்றில் கலந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாசுக் கட்டுப்பாட்டு துறைக்கு பலமுறை புகார் அளித்தும் பெயரளவுக்கு கூட விசாரணை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் எனும் புகாரை கடிதமாக எழுதி அதை வாசவி கல்லூரி வளாகத்திலுள்ள போஸ்ட் ஆபீசில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மொத்தமாக முதல்வர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாசுக் கட்டுப்பாட்டு துறைக்கு பலமுறை புகார் அளித்தும் பெயரளவுக்கு கூட விசாரணை இல்லை.




