Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழநி அருகே பாலாற்றின் கரையில் தண்ணீர் திருட்டு: நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழநி, ஜூன் 30: பழநி அருகே பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது.

பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் பாலாற்றின் கரையோரங்களில் உள்ள சில தனியார் நிர்வாகத்தினர் ஆற்றில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். எனவே, நீர்வளத்துறை அதிகாரிகள் பாலாற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.