திண்டுக்கல்: வரலெட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனையானது. அதிகபட்சமாக மல்லிகை கிலோ ரூ.800க்கு விற்பனையாவதால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் டட்லி பள்ளி எதிரில் அண்ணா பூ மார்க்கெட் உள்ளது. திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, வீரக்கல் செட்டியபட்டி, தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சென்னை, திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வரும் ஆக.26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இங்கிருந்து கேரளாவுக்கு பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன்படி நேற்று காலை கேரளாவிற்கு வாடாமல்லி, செண்டு மல்லி, பட்டன் ரோஸ் செவ்வந்தி, செண்டு மல்லி என சுமார் 5 டன் பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையான வாடாமல்லி நேற்று ரூ.30 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
மேலும் நாளை மறுநாள் ஆக.21ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு என்பதாலும், பூக்கள் வரத்து குறைவாக உள்ளதாலும் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனையானது.
மார்க்கெட்டில் நேற்று காலை நிலவரப்படி (ஒரு கிலோ) பூக்கள் விலை விபரம் வருமாறு: மல்லிகைப்பூ ரூ.800, கனகாம்பரம் ரூ.500, முல்லை பூ ரூ.300, ஜாதிப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.150, அரளி ரூ.300, செண்டுமல்லி ரூ.100, கோழி கொண்டை ரூ.100, ரோஜா ரூ.200, , காக்கரட்டான் ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.400, நந்தி விட்டான் ரூ.500, மருகு ரூ.100, மரிக்கொழுந்து ரூ.150, தாமரைப்பூ ரூ.40 என விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் அவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



