திண்டுக்கல், ஆக.5: திண்டுக்கல்லில் 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, ஆக.7ம் தேதி கைத்தறி கண்காட்சி, விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 1905ம் ஆண்டு ஆக.7ம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரம்பரியம் மிக்க கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் பெருமையை அதிகரிக்கவும், தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கைத்தறி தொழிலினை போற்றும் வகையில், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பினை கவுரவிக்கும் வகையிலும் 12வது தேசிய கைத்தறி தினவிழா ஆக.7ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக.7ம் தேதி காலை 10 மணிக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள பிச்சாண்டி மஹாலில், கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையும், கைத்தறி நெசவாளர்கள் நலன் காக்கும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. கைத்தறி கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

