கொடைக்கானல், ஆக.5: கொடைக்கானலில் நேற்று சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பொழிவு இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, இதனை தொடர்ந்து நேற்று செண்பகனூர் பகுதியில் உள்ள தர்காவில் மழை வேண்டி சிறப்பு பிராத்தனை மற்றும் கந்தூரி விழாவும் நடைபெற்றது.
இவ்விழாவில் 5000 நபர்களுக்கு அசைவ உணவும் வழங்கப்பட்டது.
இதனிடையே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, செண்பகனூர், உகார்த்தேநகர், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, பாம்பார் புரம், வட்டக்கானல், ஆனந்தகிரி, உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. நீண்ட நாட்கள் கழித்து மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


