Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பட்டிவீரன்பட்டி பகுதியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி, ஆக. 4: பட்டிவீரன்பட்டி பகுதியில் தேங்காய் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி கோம்பை, சித்தரேவு, நல்லாம்பிள்ளை, சிங்காரக்கோட்டை, சித்தையன்கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதானமாக உள்ள தென்னை விவசாயம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளில் விளைந்த தேங்காய்களை உள்ளூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய்களை மொத்த வியாபாரிகள் மட்டைகளிலிருந்து தேங்காய்களை உரித்து காங்கேயம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மும்பை, பெங்களூர், புதுடெல்லி போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் உரித்த தேங்காய் 1 டன் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை ஆன நிலையில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது தேங்காய் கருப்பு 1 டன் ரூ.59 ஆயிரம் வரையும், பச்சை தேங்காய் 1 டன் ரூ.55 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.120ல் இருந்து ரூ.160 வரை உயர்ந்துள்ளது. மேலும் கரி உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு பயன்படும் தேங்காய் சிரட்டைகள் 1 கிலோ ரூ.35 ஆக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தென்னை சாகுபடி மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக தென்னை விவசாயம் அதிகம் நடைபெற்று வருகிறது. காங்கேயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகமாக உள்ளதால் காங்கேயம் மார்க்கெட் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு தேங்காய்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் சில விவசாயிகள் தங்களது தென்னந்தோப்புகளில் தேங்காய்களை இருப்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.