பென்னாகரம், மே 25: வேலூரிலிருந்து ஒகேனக்கல் சுற்றுலா வந்த இடத்தில் காவிரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி நகர் பகுதியைச் சேர்த்தவர் மதனகோபால். இவரது மகன் குருபிரசாத்(18). இவர், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இருவரும், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் நேற்று முன்தினம் ஒகேனக்கல் சுற்றுலா வந்தனர். நேற்று பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். தொடர்ந்து கோத்திக்கல் மடுவு என்னுமிடத்தில் உறவினர் செந்தில் என்பவருடன் குருபிரசாத் காவிரியில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக குருபிரசாந்த் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். இதில், குருபிரசாத் சடலமாக மீட்கப்பட்டார். உடலை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர், குருபிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


