பாப்பிரெட்டிப்பட்டி, மே 25: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(32). இவர், பூனையானூர் கிராமத்தில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, அங்கு சென்ற பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன்கள் அன்புச்செல்வன்(27), முகிலன்(25) ஆகியோர், செல்போனை சரி செய்து கொடுக்கும்படி கேட்டு உள்ளனர். இ-சேவை மையத்தில் செல்போன் பழுது பார்ப்பதில்லை என வெங்கடேசன் கூறியதால், தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சரமாரி தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, அன்புச்செல்வன் மற்றும் முகிலன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில், அரூர் கிளை சிறையிலடைத்தனர்.
