காரிமங்கலம், டிச.24: காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.93 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு-மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 700 ஆடுகள், 500 மாடுகளை விற்பனைக்காக ஓட்டி வந்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், விற்பனை மந்தமாக இருந்தது. சபரிமலை மண்டல பூஜை மற்றும் மார்கழி மாத பூஜை காரணமாக கால்நடை விற்பனை குறைந்தது. நேற்றைய சந்தையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.43 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.3 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement

