கடத்தூர், ஜன. 24: கடத்தூர் அருகே போசி நாயக்கனஅள்ளி கிராமத்தில் உள்ள குந்தியம்மன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இதையடுத்து நேற்று காலை யாகசாலையிலிருந்து பல்வேறு இடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தகலசம் எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, குந்தியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிப்பட்டு மகாதீபாரதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் குல தெய்வ பங்காளிகள் மற்றும் அண்ணாநகர், போசிநாய்க்கனஅள்ளி, ஓசஹள்ளி, கோடியூர், புதுபட்டி, வேடியூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


